Thursday 14 September 2017

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-1

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-1
அய்யா துணை
காப்பு
ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்
சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.
அகிலம் 1
1. நூல் சுருக்கம்
சிவமே சிவமே சிவமே சிவமணியே
தவமே தவமே தவமே தவப்பொருளே
சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
பாரான தெச்சணமே பரம னுறுதலத்தில்
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்
முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்
பின்னா ளிரணியனைப் பிளந்துஇரு கூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா
தேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும்
தீசாதி யான துரியோதனன் முதலாய்
அவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து
எவ்வுகமும் காணா(து) ஏகக்குண் டமேகி
பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில் 20
வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்(கு) ஆக இரக்கமதாய்
அறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி
நறுகரத் தோனான நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத்
திருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய
ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய
மாய னருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே
ஈரே ழுலகும் இரட்சித்த உத்தமியே
பாரேழு மளந்த பரமே சொரித்தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து
சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல் 40
இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தாரணியி லுள்ளோர்க்குக்
கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும்
தொண்டராய்ச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறுகளும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
கண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும்
சாணா ரினத்தில் சாமிவந்தா ரென்றவரை
வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும்
மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும்
அன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை யழித்துயுகம், வைகுண்டந் தானாக்கி
எல்லா இடும்பும் இறையு மிகத்தவிர்த்துச்
சொல்லொன்றால் நாதன் சீமையர சாண்டதுவும்
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும் 60
மேலெதிரி யில்லாமல் வினையற்று ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்
காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யார மாக உள்வினைநோய் தீருமென்று
அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே
பேயை யெரித்துப் புதுமைமிகச் செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்
நீண்டபுகழ் தர்மம் நிறுத்தியர சாண்டதுவும்
பத்தும் பெரிய பாலருக்கா கவேண்டி
சத்தழியும் பாவி தடியிரும்பி லுமிருந்து
படுத்தின பாட்டையெல்லாம் பாலருக்கா கப்பொறுத்து
உடுத்த துணிகளைந்து ஒருதுகிலைத் தான்வருத்தித்
தேவ ஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப்
பாவக் கலியுகத்தில் பாராத்தியங் கள்பட்டு
நாலு பிறவி நானிலத்தி லேபிறந்து
பாலுகுடித் தாண்டி பருவதத்தின் மேல்தாண்டி
நல்லோரை யெழுப்பி நாலுவரமுங் கொடுத்துப் 80
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வானம் இடியால் மலைக ளிளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறா ரன்போரே
அவையடக்கம்
அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள்முன்னே
மெய்யா யெழுதி விதிப்பேனா னென்பதெல்லாம்
ஆனை நடைகண்ட அன்றில் நடையதொக்கும்
சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பத்தியென்ன
குயில்கூவக் கண்டு கூகைக் குரலாமோ
மயிலாடக் கண்டு வான்கோழி யாடினதென
மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன்
நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்தபிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவே னென்றதொக்கும்
எம்பிரா னான இறையோ னருள்புரிய
தம்பிரான் சொல்லத் தமியே னெழுதுகிறேன்
எழுதுவே னென்றதெல்லாம் ஈசனருள் செயலால்
பழுதுமிக வாராமல் பரமே ஸ்வரிகாக்க
தெய்வம் பராவல்
ஈசன் மகனே இயல்வாய்வா இக்கதைக்குத் 100
தோச மகலச் சூழாமல் வல்வினைகள்
காலக் கிரகம் காமசஞ்சல மானதுவும்
வாலைக் குருவே வாரா மலேகாரும்
காரு மடியேன் கௌவை வினைதீர
வாரு மடியேன் மனதுள் குடிகொள்ளவே
தர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்.
அடியெடுத்தருளல்
வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதாவதுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே
தோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது
ராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே
சுகுதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதனென் னருகில் நலமாக வந்திருந்து
சீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை
காப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து 120
தாப்பிரிய மாகச் சாற்றினா ரெம்பெருமாள்
மகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு
உகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய்
அதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து
சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை
நானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய
யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே
நூற்பயன்
வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி
தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்
என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பாரேல்
திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை
தெச்சணா புதுமை
நாரா யணரும் நல்லதிருச் செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண் டங்கிருந்து
ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில் 140
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில்
மூன்றான சோதி உறைந்திருக்குந் தெச்சணத்தில்
வந்திருந்த நற்பதியின் வளமைகே ளம்மானை
மூவாதி மூவர் உறைந்திருக்குந் தெச்சணமே
தேவாதி தேவர் திருக்கூட்டந் தெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
அகத்தீ சுவரரும் அமர்ந்திருக்குந் தெச்சணமே
மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
தாணுமால் வேதன் தாமதிக்குந் தெச்சணமே
ஆணுவஞ்சேர் காளி அமர்ந்திருக்குந் தெச்சணமே
தோசமிகு கர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
நீச வினைதீர நீராடுந் தெச்சணமே
மாது குமரி மகிழ்ந்திருக்குந் தெச்சணமே
பாறு படவு பரிந்துநிற்குந் தெச்சணமே
ஆனைப் படைகள் அலங்கரிக்குந் தெச்சணமே
சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே
ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
பார்வதியாள் வந்து பரிந்திருந்த தெச்சணமே 160
சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே
மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
தெச்சணத்தின் புதுமை செப்பத் தொலையாது
அச்சமில்லாப் பூம அடவுகே ளம்மானை
கச்சணி தனத்தா ளோடு கறைமிடற் றண்ண லீசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத் தேவி
நிச்சய மான கன்னி நிறைந்திடும் பூமி யான
தெச்சாண புதுமை சொல்லிச் சீமையி னியல்புஞ் சொல்வோம்
சீமையின் இயல்பு
புன்னை மலர்க்காவில் பொறிவண் டிசைபாட
அன்ன மதுகுதித்து ஆராடுஞ் சோலைகளும்
கன்னல் கதலி கரும்பு பலாச்சுளையும்
எந்நேர மும்பெருகி இலங்கிநிற்குஞ் சோலைகளும்
எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்
பொங்கு கதிரோன் பூமேற் குடைநிழற்ற
நந்தா வனம்பூத்து நகரி மணம்வீச
செந்தா மரைபூத்துச் செலம் புமணம்வீச
அரகரா வென்று அபயமிடு மொலியும்
சிவசிவா வென்று துதிக்கின்ற பேரொலியும்
முடியு மடியுமில்லா முதலோனைப் போற்றொலியும்                 180
 
மடியில் பணம்போட்டு மார்க்குத்தும் பேரொலியும்
முத்தாலே பாண்டி முதன்மடவா ராடொலியும்
மத்தாலே மோரு மடமடென்ற பேரொலியும்
சமுத்திரத்து முத்து தான்கரையில் சேருவதும்
குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை யிடுமொலியும்
சங்கீத மேளம் தானோது மாலயமும்
மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்
காரண வேதக் கல்விமொழி ஆலயமும்
வாரணத்தின் மீதில் வரும்பவனி யாரபமும்
மாவேறி வீதி வரும்பவனி வீதிகளும்
கூரை யிலேமுத்து குலைசாய்க்கும் கன்னல்களும்
பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் னளிப்பாரும்
அன்னமிடுஞ் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்
சொர்ண மளித்துச் சொகுசுபெற நிற்பாரும்
சிவனே சிவனேயென்று சிவகருத்தாய் நிற்பாரும்
தவமே பெரிதெனவே தவநிலைகள் செய்வாரும்
கோவிந்தா வென்று குருபூசை செய்வாரும்
நாவிந் தையாக நால்வேதம் பார்ப்பாரும்
மாரி பொழியும் மாதமொரு மூன்றுதரம்
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளரெல்லாம் 200

நாத்து நடும்புரசி நளினமிகு சொல்லொலியும்
கூத்து ஒலியும் குருபூசை தன்னொலியும்
எப்பாரெல் லாம்புகழும் ஏகா பதியதுபோல்
தப்பா தெச்சணத்தின் தன்மையீ தம்மானை
காமனை எரித்த ஈசன் கழலிணை மறவா வண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரி யான
சீமையின் குணமுஞ் சொல்லிச் சிறந்திடும் பூமி தன்னில்
நேமவர் தர்ம ஞாய நிலைதனை நிகழ்த்து வாரே
தர்மநீதம்
ஆதிப் பொருளை அனுதினமுந் தானோதி
சோதி யுடநீதம் சொல்லுவே னம்மானை
தெய்ன மனுநீதம் தேசாதி ராசநீதம்
மெய்யருந்தும் நீதம் விளம்புவே னம்மானை
ஆயிரத்து எட்டு ஆனதிருப் பதிக்கும்
வாயிதமாய்ப் பூசை வகுப்பு முடங்காது
கோயில் கிணறு குளங்கரைக ளானதையும்
தேய்வு வராதே சுற்றுமதில் கட்டிடுவார்
எளியோர் வலியோர் என்றெண்ணிமிகப் பாராமல்
களிகூர நன்றாய்க் கண்டவழக் கேயுரைப்பார்
அன்ன மடம்வைத்து ஆகங் களிகூர
எந்நேரம் பிச்சை இடுவா ரெளியோர்க்குப் 220
பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்க் களிப்பாரும்
எந்த இரவும் இருந்துபிச்சை யீவாரும்
ஆறி லொருகடமை அசையாமல் தான்வேண்டி
தேறியே சோழன் சீமையர சாண்டிருந்தான்
சிவாயநம வென்ற சிவவேத மல்லாது
கவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
ஆறி லொருகடமை அதுதரவே மாட்டோமென்று
மாறொருவர் சொன்னால் மன்னன்மறுத் தேகேளான்
பன்னிரண் டாண்டு பரிவா யிறையிறுத்தால்
பின்னிரண் டாண்டு பொறுத்திறை தாருமென்பான்
இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை யாண்டிருந்தான்
அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
மெய்யறிவு கொண்ட மேலாம்பதத் தெளிவோன்
தெய்வத் திருநிலைமை செப்புவே னம்மானை
இவ்வகை யாகச் சோழன் இருந்து ராச்சியத் தையாள
கவ்வைக ளில்லா வண்ணம் கலியுகம் வாழும் நாளில்
செவ்வகைத் திருவே யான திருவுளக் கிருபை கூர்ந்து
தெய்வமெய் நீதம் வந்த செய்தியைச் செலுத்து வாரே.
தெய்வ நீதம்
வாரம தில்லாமல் மன்னன் அதிசோழன் 240
நீதமாய்ப் பூமி நிறுத்தியர சாளுகையில்
கண்டு வேதாவும் கமலத் திருமகளும்
நன்று தெய்வாரும் நாரா யணருமெச்சி
அன்றந்த மாமுனிவர் அல்லோருந் தான்கூடி
சென்று சிவனார் திருப்பாதந் தெண்டனிட்டுச்
சாகா திருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகா பரனே எங்கும் நிறைந்தோனே
மூலப் பொருளே முதற்பொருளே காரணரே
சாலப் பொருளே தவத்தோ ரரும்பொருளே
நாரணரும் வேதா நாடிப் பொரும்போரில்
காரணரே நீரும் கனல்கம்ப மானோரே
ஆலமு தருந்தி அரவை மிகவுரித்துக்
கோலத் திருக்கழுத்தில் கோர்வையா யிட்டோனே
ஆனைதனை யுரித்து அங்கமெல் லாம்புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
கோனேந்திர கிரியில் குடியிருக் குங்கோவே
தானே யிருக்கும் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அதியத் திருமுதலே
சோதியே சோழன் சொல்நெறியைக் கேளுமையா
வாடிவந்த பச்சினுக்கு வாளா லவனுடம்பைத்
தேடிவந்த வேடனுக்குத் துடையரிந் தீந்தவன்காண் 260
ஆறி லொருகடமை அவன்வேண்டிட் டானெனவே
மாறி யவன்புவியோர் மனதிற்கௌ வைகளில்லை
கோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும்
சேவித் தனுதினமும் செய்வானே தானதர்மம்
ஆதலால் சோழன் அரசாளுஞ் சீமையிலே
நீதமாய்த் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா
என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கன்றிருந்த ஈசர் கரியமா லோடுரைப்பார்
நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமா தேவி தனைவருத்தும்
வருணன் தனையழைநீ மாதமும் மாரிபெய்ய
கருணைக் குடைவிரிக்க கங்குல் தனையழையும்
வாசி யதுபூவாய் வழங்க வரவழையும்
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடுநீ
குருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய்
திருவீற் றிருக்கச் செய்திடுநீ கோலமது
நித்திரா தேவி நித்தமந்தப் பூமியிலே
மத்திபமாய்க் காக்க வையென்றா ரீசுரரும்
நினைத்தோர்க் குறுதி நினைவிலறி வுதோன்ற
எனைத்தோத் திரங்கள் இகழாமல் வையுமென்றார் 280
பன்றியோ டேகடுவாய் பண்புற் றிருந்திடவும்
அன்றிலோ டேகுயிலும் அன்புற் றிருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்
இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
பட்டியும் முயலும் பண்புற் றிருந்திடவும்
பசுவும் புலியுமொரு பக்கம்நீ ருண்டிடவும்
கசுவுங் கரைபுரளக் கரும்புமுத் தீன்றிடவும்
சாத்திர வேதம் சமயம் வழுகாமல்
சூத்திர மாகத் துல்வப் படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று
இனிதாக நாளும் இறவா திருந்திடவும்
சந்திர சூரியர்கள் தட்டுமிக மாறாமல்
இந்திரரும் தேவர் இருஷிநிலை மாறாமல்
தான தவங்கள் தப்பிமிகப் போகாமல்
வானவர்கள் தேவர் வளமாக நின்றிடவும்
ஈன மில்லாமல் இதுதெய்வ நீதமெல்லாம்
மானம் நிறுத்தி வையென்றா ரீசுரரும்
இப்படித் தெய்வ நீதம் ஈசுர ரிதுவே கூற
சொற்படி மறவா வண்ணம் திருமரு கோனுஞ் செய்தார்    300
அப்படித் தவறா நீதம் அம்புவி தனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே
பெண்கள் நிலைமை
தெய்வத்திரு நிலைமை செப்பியபின் தேசமதில்
நெய்நிதியப் பெண்கள் நிலைமைகே ளம்மானை
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவே னம்மானை
கற்கதவு போலே கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திருவுகோ லவள்மனது
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
முன்பான சோதி முறைபோ லுறவாடிப்
போற்றியே நித்தம் பூசித் தவள்மனதில்
சாற்றிய சொல்லைத் தவறா மலேமொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமா னதுதடவிக் கால்தடவி நின்றிடுவாள்
துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒருசாமம் மங்கை யெழுந்திருந்து
முகத்து நீரிட்டு நான்முகத்தோ னையுந்தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்கார மாய்ப்பெருக்கிப்
பகுத்துவ மாகப் பாரிப்பார் பெண்ணார்கள் 320
தவத்துக் கரிய தையல்நல்லார் தங்களுட
மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்குமந்த நாளையிலே
வனியான சாதி வளமைகே ளம்மானை
சாதி வளமை
சான்றோர் முதலாய்ச் சக்கிலி யன்வரையும்
உண்டான சாதி ஒக்கவொரு இனம்போல்
தங்கள்தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்தோங்கி யேவாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அலுவல் தினஞ்செய்து அன்புற் றிருந்தனராம்
தான்பெரி தென்று தப்புமிகச் செய்யாமல்
வான்பெரி தென்று மகிழ்ந்திருந்தா ரம்மானை
ஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தா யிருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது
வையம்வழக்கு வாரா தேயிருந்தார்
அடிபணிய வென்று அலைச்சல்மிகச் செய்யாமல்
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தா ரம்மானை
சேயினுட ஆட்டுச் செவிகேட் டிருப்பதல்லால்
பேயினுட ஆட்டோர் பூதரறியா திருந்தார் 340
இந்தப் படிமனுவோர் எல்லா மிருந்துவொரு
விந்துக் கொடிபோல் வீற்றிருந்தா ரம்மானை
இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
மற்படித் தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்பு ரீசர் கண்டு மகிழ்ந்தனர்
கயிலை வளமை
முத்தான சீமை மூன்று நீதத்தோடு
பத்தாசை யாகப் பண்பாய்த் தழைத்திடவே
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே
தேவ ருறையும் திருக்கயிலை தன்வளமை
பாவலர்கள் முன்னே பாடினா ரம்மானை
ஈச ருறையும் இரத்தின கிரிதனிலே
வாசவனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க
பொன்னம் பலநாதர் பொருந்திருக்கும் மண்டபமும்
கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும்
வேதப் புரோகி விளங்குகின்ற மண்டபமும்
சீத உமையாள் சிறந்திலங்கும் மண்டபமும்
நீதத் திருமால் நிறைந்திலங்கும் மண்டபமும்
சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும் 360
ஆதவனுஞ் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்
வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்
ஆரு மறிந்து அளவிடக் கூடாத
பாரு படைத்த பரமே சுரனாரை
விசுவாச மேலோர் விமல னடிவணங்கி
வசுவாசு தேவன் வந்து மிகவணங்கி
மறைவேத சாஸ்திரங்கள் மலரோ னடிவணங்கி
இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்கி
எமதர்ம ராசன் எப்போதும் வந்துநிற்க
பூமகளும் வேதப் புரோகிவந்து தெண்டனிட
காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்
நாமநெடி யோன்பதத்தை நாள்தோறும் போற்றிநிற்க
தலைவ னிருக்கும் தங்கத் திருக்கயிலை
நிலைமை யெடுத்துரைக்க நிலையாது அம்மானை
ஆறு செஞ்சடை சூடிய அய்யனார்
அமர்ந்து வாழுங் கயிலை வளமதைக்
கூறக் கூறக் குறைவில்லை காணுமே
கொன்றை சூடும் அண்டர் திருப்பதம்
வாறு வாறு வகுக்க முடிந்திடா
மகிழுங் குண்ட வளஞ்சொல்லி யப்புறம்
வேறு வேறு விளம்பவே கேளுங்கோ
மெய்யுள் ளோராகிய வேத அன்பரே
அகில வளமை
கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது 380
அகில வளமை அருளக்கே ளம்மானை
தேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க
மூவாதி மூவர் மிக்கவொரு மிக்கவொரு
சிங்கா சனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே
மங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள்
ஈரே ழுலகும் இரட்சித்த வுத்தமியாள்
பாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்
நன்றா யெழுந்திருந்து நாரா யணர்பதத்தைத்
தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை
தேவரீ ரென்னைத் திருக்கலியா ணமுகித்துக்
கோவரி குண்டக் குடியிருப்பி லேயிருத்திப்
போவது என்ன புதுமை எனக்கறிய
தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள்
பின்னுமந்த லட்சுமியாள் பெருமாள் தனைத்தொழுது
என்றும் இருக்க இறவா திருப்போனே
ஆதியால் சூட்சம் அளவெடுக்கக் கூடாத
நாதியாய் நின்ற நாரா யணப்பொருளே
தேவாதிக் கெல்லாம் திருமுதலாய் நின்றோனே
மூவாதிக் கெல்லாம் முதன்மையாய் நின்றோனே
உமக்கு எதிரி உலகமதி லுண்டோகாண்
தமக்கு எதிரிவந்த தன்மை மிகவுரையும் 400
உகத்துக் குகம்பிறந்து உலகிடத்தி லேயிருக்க
அகத்துவந்த ஞாயம் அருளுவீ ரெம்பெருமாள்
என்று திருவும் இதுவுரைக்க மாயவரும்
நன்று நன்றென்று நாரா யணருரைப்பார்
நீடிய யுகம்
சக்தி சிவமும் தானுதித்த காலமதில்
எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும்
ருத்திரர் மயே சுரருதித்த நாளதிலும்
பத்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்
வானோர்கள் தெய்வார் மறைவேத சாஸ்திரமும்
ஈனமாய்ச் சண்டன் இவன்பிறந்த நாளதிலும்
ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்
ஈதுதித்த காலம் இராச்சியமொன் றுண்டுகண்டாய்
அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
இவ்வுகத்து நாமம் என்னவிடு வோமென்று
மாலும் பிரமாவும் மாயா திருப்போனும்
ஆலோசித் தவர்கள் ஆகமத்தைத் தான்பார்த்து
நீடிய யுகமெனவே நியமித் துறுதிகொண்டு
தேடிய முப்பொருளும் செப்பினர்கா ணம்மானை
அவ்வுகத்தை ஈசர் ஆர்ப்பரித்த காலமதில்
இவ்வுகத்துக் காரை இருத்துவோ மென்றுசொல்லி 420
எல்லோருங் கூடி இதமித்தா ரம்மானை
அல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில்
தில்லையா ரீசன் திருவேள்வி தான்வளர்க்க
நல்லையா வேள்வி நன்றாய் வளர்த்திடவே
பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே
அறந்தா னறியா அநியாயக் கேடனுமாய்
பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு
அண்டம் அமைய அவன்பிறந்தா னம்மானை
முகங்கண் களெல்லாம் முதுகுப்பு றமேலாட
நகக்கரங்கள் கோடி கால்க ளொருகோடி
தவங்க ளறியாச் சண்டித் தடிமோடன்
பவமே நாள்தோறும் பண்ணு மியல்புடையோன்
குறோணி யவனுயரம் கோடிநாலு முழமாய்
கயிலை கிடுகிடெங்கும் கால்மாறி வைக்கையிலே
அகிலங் கிடுகிடெங்கும் அவனெழுந்தா லம்மானை
இப்படியே குறோணி என்றவொரு அசுரன்
முப்படியே நீயே யுகத்தி லிருந்தான்காண்
இருந்து சிலநாள் இவன்தூங்கித் தான்விழித்து
அருந்தும் பசியால் அவனெழுந்து பார்ப்பளவில்
பாருகங் காணான் பலபேருடல் காணான் 440
வாருதி நீரை வாரி விழுங்கினன்காண்
கடல்நீ ரத்தனையும் கடவாய் நனையாமல்
குடலெல்லா மெத்தக் கொதிக்கு தெனவெகுண்டு
அகிலம் விழுங்க ஆர்ப்பரித்து நிற்பளவில்
கயிலை தனைக்கண்டு கண்கள்மிகக் கொண்டாடி
ஆவி யெடுத்து அவன்விழுங்கு மப்போது
தாவிக் குவித்துத் தப்பினார் மாயவரும்
மாயவரு மோடி மண்ணுலோகம் புகுந்து
தூயவரு மங்கே சிவனை மிகநினைத்துத்
தவசு இருந்தார்காண் தாமோ தரனாரும்
தவசு தனிலீசன் சன்னாசி போலேவந்து
ஆருநீ யிந்த ஆழ வனந்தனிலே
ஏதுநீ தவசு எனைநினைந்த வாறேது
என்று சன்னாசி இதுவுரைக்க மாயவரும்
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவரோடே
கயிலை யெமலோகம் கறைக்கண்டர் சக்திவரை
அகில மதைக்குறோணி அசுரனென்ற மாபாவி
விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன்
பளிங்கு மலைநாதன் பாரத்தே வாதிமுதல்
பண்டுபோல் நாளும் பதியி லிருந்திடவே 460
என்றுங் கயிலை இலங்கி இருந்திடவும்
முண்டு செய்தபாவி முகமு மவனுடம்பும்
துண்டா றதாகத் தொல்புவியி லிட்டிடவும்
கண்டங்கண்ட மாய்ப்போடக் கடிய வரமெனக்கு
தண்டமிழீர் நீரும் தரவே தவசிருந்தேன்
என்று திருமால் எடுத்துரைக்க வேயீசர்
மன்று தனையளந்த மாலோ டுரைக்கலுற்றார்
கேளாய்நீ விட்டிணுவே கேடன் குறோணிதனைத்
தூளாக்கி யாறு துண்ட மதுவாக்கி
விட்டெறிந்தா லவனுதிரம் மேலு மொருயுகத்தில்
கெட்டுக் கிளையாய்க் கொடிய சூரக்குலமாய்ப்
பிறக்கு மவனுதிரம் பொல்லாதான் தன்னுடம்பு
துண்ட மொன்றுதானும் தொல்புவியி லேகடிய
குண்டோம சாலியனாய்க் குவலயத்தி லேபிறப்பான்
அப்படியே குறோணி அவனுதிர மானதுவும்
இப்படியே ஆறு யுகத்துக் கவனுடம்பு
வந்து பிறப்பான்காண் மாற்றானா யுன்றனக்கு
உகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து
அகத்துக் கவன்பிறப்பு ஆறு யுகமதிலும்
உண்டு மவன்சீவன் உயிரழிவு வந்தவந்நாள் 480
பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக்
கொன்றுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண்
என்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை
அன்று விடைவேண்டி அதிகத் திருமாலும்
குன்றுபோல் வந்த கொடிய படுபாவி
குறோணி தனைச்செயிக்கக் கோபம்வெகுண் டெழுந்து
சுறோணித வேதன் துடியாய் நடந்தனராம்
நாகத்தணை கிடந்த நாரா யணமூர்த்தி
வேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார்
வெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை
கெட்டி தானென்று கிருபைகூர்ந்தே தேவர்
துண்டம தாறும் தொல்புவியி லேபோட்டுப்
பிண்டமதைச் சுமந்து போட்டனர்கா ணம்மானை
அந்தக் குறோணி அவனுதிர மானதையும்
கொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி
உதிரமதை விட்டு உயர்ந்தபீடம் போட்டுச்
சதுர யுகமெனவே தான்வகுத்தா ரோர்பீடத்தை
சதுரயுகம் - குண்டோமசாலி பாடு
அவ்வுகத் திலேயுதிரம் அசுரக் குலமாகி
முவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதைக்
குண்டோம சாலி எனவே கொடியவனாய்ப் 500
பண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில்
வந்துபிறந் தான்சதுர வையகத்தி லம்மானை
முந்து பிறந்த முழுமோச மானதிலும்
மந்து முகமாய் மாபாவி தன்னுயரம்
நானூறா யிரமுழங்கள் நாடுமவன் கரங்கள்
முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே
உடைதோ ளுடம்பு உருவறியா மாபாவி
படைத்தோன் தனையறியான் பாரியென்று மறியான்
அட்டைபோ லேசுருண்டு அம்மிபோ லேகிடப்பான்
மட்டைபோ லேதிரிவான் வயிறு மிகப்பசித்தால்
அன்னுகத் திலுள்ள அசுரக் குலங்களையும்
தன்வயிற்றுக் கிட்டுத் தடிபோ லுருண்டிடுவான்
இப்படியே நாளும் இவன்குலங்க ளானதெல்லாம்
அப்படியே தின்று அவன்பசிக ளாற்றாமல்
அய்யையோ வென்று அலறினன்கா ணம்மானை
மெய்யை யனான விறுமா அதுகேட்டுச்
சிவனைத் தொழுது செப்புவா ரம்மானை
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே
எவனோ ஒருத்தன் இட்டசத்த மானதிலே
தவலோக மெல்லாம் தானலைவ தேதெனவே 520
மாய னதுகேட்க வகுப்பா ரங்கீசுரரும்
ஆயனே நீயும் அறியலையோ ஞாயமது
குண்டோ மசாலி கொடியமா பாவியனாய்ப்
பண்டோர் குறோணி பாதகன்தன் துண்டமதாய்ப்
பிறந்தா னவனும் பேருதிரந் தன்கிளையாய்
இறந்தா ரவர்கள் இரையா யவன்தனக்கு
ஆன பசிகள் ஆற்றாம லேயவனும்
வானமது அலைய வாய்விட்டான் கண்டாயே
என்று சிவனார் ஈதுரைக்க மாயவரும்
அன்று மகாமாலும் அக்குண்டோ மசாலினுக்கு
இரையாகத் தேவர்களை ஏற்றநாங் கிலாக்கி
வரையா னதைத்தூண்டில் மறையைக் கயிறாக்கி
வாயுவைத் தோணி வருணன் தனைமிதப்பாய்த்
தேய மதைச்சூழத் திரைகடலைத் தான்வருத்தி
ஓடையாய்ச் சதுர யுகம்வழியே தானேவி
தேடரிய மாயன் திருவோணி தானேறி
மூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவரக்
காவாலி மாயன் கன்னியிலே தூண்டலிடச்
சதுர யுகமாளும் சண்டித்தடி மோடன்
எதிரே வருமாற்றில் இரையைமிகக் கண்டாவி 540
நாடிப் பசிதீர நல்லஇரை யாகுமென்று
ஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டல்தனை
தூண்டில் விழுங்க சுரண்டி மிகக்கொளுவி
மாண்டனன் காண்பாவி வலிய மலைபோலே
பாவி மடிய பரமே சுரனாரும்
தாவிச் சலத்தால் சதுர யுகமழித்தார்
தேவர்கள் வேண்டுகோள்
சதுர யுகமழிய தானவர்க ளெல்லோரும்
மதுர மொழியீசன் மலரடியைத் தான்பூண்டு
தேவர் மறையோர் தெய்வேந் திரன்முதலாய்
மூவர்களும் வந்து முதலோ னடிபணிந்து
பரமனே நீரும் படைத்தயுகம் ரண்டதிலும்
வரமே துங்கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே
அந்த சந்தமில்லை ஆணுவங்கள் தானுமில்லை
இந்த வகைச்சாதி இல்லாம லீசுரரே
பிறந்தா லவனும் பெரியோ னடிவணங்கி
வரந்தா ருமென்று வாளா யுதத்தோடே
வலுவும் பலமும் வாய்த்தசூ ரப்படையும்
கொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும்
கெட்டுக் கிளைபாணி கிரண மதுவுடனே
நட்டுப் பயிரால் நாளும் பசிதீர்ந்து  560
இருந்து பொறுக்க இராச்சியமொன் றுண்டாக்கும்
வருந்தி மகாதேவர் மலரோ னடிவணங்க
ஆதி சிவனும் அதிகசந் தோசமதாய்
வேதியரைத் தான்வருத்தி விளம்புவா ரீசுரரும்
நெடிய யுகம்
தில்லைமலாலன் மல்லோசி வாகனன் பாடு
மாலும் பிரம்மாவும் வாய்த்தபர மேசுரரும்
நாலு மறையோரும் நடுவர்மிகக் கூடி
முன்னேயுள்ள துண்டம் ஒன்றைரண் டாக்கிவைத்துப்
பின்னே படைப்புப் பிரம்மா வுருப்படைக்க
சிவாயப் பொருள்தான் சீவ நிலைகொடுக்க
உபாயப் பொருள்தான் உல்லாச மேகொடுக்க
முண்ட மிருபேரும் உருவா யுருவெடுத்துத்
தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி
அப்போது மாயன் ஆதி யடிவணங்கி
இப்போது ஈசுரரே இவர்களிரு பேர்க்கும்
என்னபேர் தானும் இடுவோ மெனவுரைக்க
வன்னப் பரமேசு வரனார் வகுக்கலுற்றார்
திறந்தான் பெருகும் திருமாலே நீர்கேளும்
பிறந்த அசுரருக்குப் பேரிட வேணுமென்றால்
மாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்காள்
ஆயனே நீயும் அதுகேட்க வேணுமென்றார் 580
அண்டபிண்டங் காணாத ஆதிகயி லாசமதில்
தெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி
இந்த முனியடுக்கல் இவர்கள்ரண்டு பேரைவிட்டு
அந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம்
என்று சிவமுரைக்க எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறந்த அசுரர்களைத் தானேவி
போறாரே சூரர் பொருப்பொரு நூறானதுபோல்
வாறாரே சூரர் வாய்களிரு காதவழி
சூரருட கைகள் தொண்ணூற்றீ ரஞ்சதுவும்
மூரர்கால் நூறு உயர்ந்தசிர சன்பதுவும்
கண்களொருநூறு வெண்டரள மிருகலமே
துங்கணங் களாகச் சூர ரடந்தேறி
கண்கவிழ்ந்து யோகம் கருத்துருத்தாய் நிற்குகின்ற
வண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள்
அலைமே லெறிய ஆர்ப்பரிக்கு மவ்வளவில்
கலைமேல் பரந்த கடிய முனிபகர்வான்
ஏனடா என்னை இருந்த தவசழித்து
வீணடா செய்தாய் விழலா யறமோடா
என்னை யெடுத்து இக்கடல்மேல் போட்டாலும்
உன்னை யறுக்க ஓரம்பா யுருவெடுத்துப் 600
பங்கயக் கண்மாயன் பக்கமதில் நான்சேர்ந்து
உங்க ளிருபேரை ஊடுருவ நானறுத்து
இந்தக் கடலில் எடுத்துங்களை யெறிந்து
உந்தனி னூரை ஒக்கக்கரிக் காடாக்கி
நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன்
வானுதிரு வாணையென்று மாமுனியுஞ் சாபமிட்டான்
உடனே முனியை உயர்த்தியெடுத் தேசூரர்
கடல்மே லெறிந்தார் கர்ம விதிப்படியால்
அந்த முனியும் அரனா ரருளாலே
மந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான்
சுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து
உருதிக் குடிசூரர் ஓடிவந் தேகயிலை
மோச முடன்வந்த முழுநீசப் பாவியர்கள்
ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றா ரம்மானை
சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர்
கருதிய சூரர் கயிலை மேவியே
பருதி சூடும் பரமனைப் போற்றியே
வருதி கேட்டு வருந்தினர் சூரரே
சுருதி முனிதவத்தைத் தொலைத்தே யவன்தனையும்
பொருதி கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள் 620
ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிவரங் கேட்டனராம்
வாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கித்
தூயவளே மாயவளே சூர ரிருவருக்கும்
நேயமுள்ள தோர்வரங்கள் நீகொடுக்க வேணுமென்றார்
வரங்கொடுக்க வென்று மறையோ னதிசயித்துச்
சிரசன் பதுடைய சீர்சூரனை நோக்கி
ஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார்
தீது குடிகொண்ட சிரசன்ப தோனுரைப்பான்
மாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே
ஆதவரே யெங்களுக்கு அதிகவரம் வேணுமென்றான்
அம்புவியி லுள்ள அஸ்திரங்கள் வாளாலும்
தம்பிரா னானாலும் தாண்டமுடி யாதவரம்
வானமிது பூமி மலைகளிது மூன்றிலுள்ள
தானவராய் வாழுகின்ற தங்களா லெங்களையும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
மல்லுக் குபாயமதும் வலுவும் பலமதுவும்
ஏவலாய் வானோர் எமைத்தொழுது நின்றிடவும்
தவறாம லிந்தவரம் தரவேணு மென்றுரைத்தான்
உடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு
அடமா யவன்கேட்ட அவ்வரங்கள் தாங்கொடுத்து 640
நீச னிருக்க நெடிய யுகம்வகுத்துப்
பாசனுக்குப் பேரு பகர்ந்தே விடைகொடுத்தார்
விடைவேண்டிப் பாவி விமலன் தனைத்தொழுது
மடைப்பாவி யான மல்லோசி வாகனனும்
தில்லைமல் லாலனுமாய்ச் சேர்ந்தங் கிருபேரும்
வல்ல சிவன்வகுத்த வையகத்தில் வந்தனராம்
வந்தார் சிவன்வகுத்த வையகத்தி லம்மானை
அந்த அசுரர் அவரிருக்கு மந்நாளில்
உதிர மதுசூரர் ஒக்க உதித்தெழுந்து
செதிர்சூரப் படையாய்ச் சேர்த்தங் கிருந்தனராம்
இப்படியே சூரர் இவர்சேர்க்கை தன்னுடனே
அப்படியே அந்தயுகம் ஆண்டிருந்தா ரம்மானை
ஆண்டிருந்த சூரர் அவரிருக்க மேடைகளும்
தாண்டிநின்ற வானத் தடாக உயரமதே
சூரப் படைகள் தொழுது அடிபணிந்து
பாதக ருக்குநித்தம் பணிந்தேவல் செய்திடுவார்
ஊழியங்கள் செய்து உற்றயிறை யிறுத்துப்
பாளையங் களாகப் பணிந்திருந்தா ரம்மானை
சூரர் கொடுமுடியைச் சூட்டி யரசாண்டு
பாரமுள்ள கோட்டைப் பண்ணினா ரம்மானை 660
இப்படியே சூரர் இவர்வாழு மந்நாளில்
முப்படியே சூரர் ஊழி விதிப்படியால்
இறப்ப தறியாமல் எரியைமிகக் கண்டாவி
உறப்பொசிக்கச் சென்ற விட்டி லிறந்தாற்போல்
தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார்
மும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டாவி
நம்பிபத மறந்து நாம்தாம் பெரிதெனவே
கெம்பினார் சூரர் கெட்டனர்கா ணம்மானை
சூர ரவர்செய்த துட்டம் பொறுக்காமல்
வீர முள்ளதேவர் விரைந்தே முறையமிட
தேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டுக்
காவலாய் நித்தம் கைக்குள் ளிருக்குகின்ற
பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங் கீசுரரும்
கண்ணே மணியே கருத்தினுள் ளானவளே
பூலோகந் தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும்
மேலோகம் வாழும் விமலரா யுதத்தாலும்
மலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும்
அலையா வரங்கள் அச்சூரர்க் கேகொடுத்தோம்
தரியா முடுக்கம் தான்பொறுக்காத் தேவரெல்லாம்
அரியோ யெனமுறையம் அநேகம் பொறுக்கரிதே 680
என்றீசர் சொல்ல இயல்கன்னி யேதுரைப்பாள்
மலைலோகம் மேலோகம் வையமதி லாகாட்டால்
அலைமேல் துயிலுமொரு ஆண்டியுண்டு கண்டீரே
முன்னேயச் சூரருக்கு முற்சாப மிட்டதொரு
வன்னச் சுருதிமுனி மந்திரபுரக் கணையாய்
வளர்த்தங் கிருப்பான்காண் மாயருட பக்கலிலே
கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந் தேயீசர்
மாலை வரவழைத்து வளப்பமெல் லாமுரைக்கச்
சாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன்
அலையில் வளர்ந்த அதிகக் கணையெடுத்துச்
சிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத்தொடுக்க
அம்புப் பகையாலும் அதிகமால் பகையாலும்
பம்பழித்துச் சூரனூர் பற்பம்போல் தானாக்கிச்
சூர ரிருவருட சிரசை மிகஅறுத்து
வாரிதனில் விட்டெறிந்து வாளி சுனையாடி
மலரோ னடிபணிந்து வைகுண்டங் கேட்டிடவே
பலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார்
அவ்வுகத்தை மாயன் அன்றழித்து ஈசரிடம்
செவ்வாக நின்று செப்பினா ரீசருடன்
கிரேதா யுகம்
இன்னமொரு யுகத்தை இப்போ படைக்கவென்று 700
மன்னதியத் திருமால் மனமே மிகமகிழ்ந்து
சொன்னவுட னீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
ஓரிரண்டு துண்டம் உகமாய்ப் பிறந்தழிந்து
ஈரிரண்டு துண்டம் இருக்குதுகாண் மாயவரே
நூல்முறையைப் பார்க்கில் நெடிய யுகங்கழிந்தால்
மேலுகந்தா னிங்கே மிகுத்தகிரே தாயுகந்தான்
இருக்குதுகா ணென்று ஈச ருரைத்திடவே
மருக்கிதழும் வாயான் மனமகிழ்ந்து கொண்டாடி
துண்டமொன்றை ரண்டாய்த் தூயவனார் தாம்வகிர்ந்து
மண்டலங்கள் மெய்க்க வாணாள் கொடுத்தருளி
சிங்கமுகச் சூரனெனும் திறல்சூர பற்பனெனும்
வங்கணமாய்ப் பிண்டம் வகுத்தனர்கா ணம்மானை
சூர னுடசிரசு தொளாயிரத்து நூறதுவும்
போரக்கால் கைகள் பொருப்பெடுக்கு மாபலமும்
சூரன் சுரோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி
ஊரேநீ போவென்று உற்ற விடைகொடுத்தார்
விடைவேண்டிச் சூரன் வேண்டும் படையோடே
திடமாகப் பூமி செலுத்தியர சாளுகையில்
வரம்வேண் டவென்று மலரோ னடிவணங்கி 720
திறமான ஓமமிட்டுச் செப்புக் குடம்நிறுத்தி
நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல்
அன்றந்தச் சூரன் அக்கினி யில்விழுந்தான்
சூரபற்பன் விழவே சிங்கமுகச் சூரனவன்
பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தா னக்கினியில்
ஆனதா லீசுரரும் அம்மைஉமை யுமிரங்கி
ஈனமாஞ் சூரனுக்கு ஏதுவரம் வேணுமென்றார்
ஈச னுரைக்க ஏற்றஅந்தச் சூரனுந்தான்
பாசமுடன் செத்த பற்பனென்ற சூரனையும்
எழுப்பித் தரவேணும் யாங்கள்மிகக் கேட்டவரம்
மழுப்பில்லா வண்ணம் வரமருள்வீ ரென்றுரைத்தான்
சூர னிவன்கேட்க சிவனா ரகமகிழ்ந்து
பாரமுள்ள ஓம பற்பமதைத் தான்பிடித்துச்
சிவஞான வேதம் சிந்தித்தா ரப்பொழுது
பவமான சூர பற்பன் பிறந்தனனாம்
இறந்து பிறந்தனற்கும் இளையோ னவன்தனக்கும்
சிறந்த புகழீசர் செப்புவா ரப்பொழுது
சூரரே உங்களுக்குத் தோற்றமுள்ள தோர்வரங்கள்
வீரரே கேளுமென்று வேத னிவையுரைக்க
அந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி 740
உன்னாலு மைந்துமுகம் உள்ளவர்கள் தம்மாலும்
உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும்
இலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
வல்லவனே நீயும் வாழுங் கயிலையதும்
தேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும்
ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள்
முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும்
பழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான்
தாருமென்று சூரன் தாழ்மை யுடன்கேட்க
ஆரு மொப்பில்லா ஆதி யகமகிழ்ந்து
கேட்டவர முழுதும் கெட்டியா யுங்களுக்குத்
தாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார்
வரங்கொடுத் தீசர் மலைகயிலைக் கேகாமல்
பரம உமையாளைப் பையஎடுத் தணைத்து
அலைமே லேஆயன் அருகிலே போயிருந்து
மலைமே லேசூரன் வாய்த்ததென் றவ்வரங்கள்
கயிலை முழுதும் காவலிட்டுத் தேவரையும்
அகில முழுதும் அடக்கியர சாண்டனனே
அப்படியே சூரன் அரசாண் டிருக்கையிலே 760
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவரையும் வானவரைத் தெய்வேந் திரன்வரையும்
மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமில்லா தாயன் எடுத்தா ரொருவேசம்
ஈசனிடஞ் சென்று இயம்பினா ரெம்பெருமாள்
வாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு
ஏது வரங்கள் ஈந்திர்கா ணென்றுரைக்கத்
தாது கரமணிந்த தாமன்பின் னேதுரைப்பார்
வையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும்
தெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தம்மாலும்
அஞ்சு முகத்தாலும் அழியா தவனுயிரும்
தஞ்சமிட வானோர் தையல்தெய்வக் கன்னிமுதல்
கயிலை முழுதும் கமண்டலங்க ளேழுமுதல்
அகில முழுதும் அடக்கி வரங்கொடுத்தோம்
என்று வேதாவும் இவையுரைக்க மாலோனும்
நின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகிப்
பேயனுக் கென்னுடைய பிறப்பைக் கொடுத்தல்லவோ
தேயமதில் நானும் திரிந்தலையக் காரணந்தான்
என்று திருமால் இதுசதையஞ் சொல்லியவர் 780
இன்றந்தச் சூரர் இருவர்தமைக் கொல்லவே
கந்தன் அவதாரம்
ஆறு முகமாய் ஆய னளவிடவே
கூறிடவே சத்திதனைக் கொண்டார்வே லாயுதமாய்
நல்ல சிவனாரை நந்தீ சுரராக்கி
வல்ல பெலமுள்ள வாய்த்ததிக் கெட்டிலுள்ளப்
பாலரையும் வீரர்களாய்ப் பண்ணினா ரெம்பெருமாள்
வாலமுள்ள சன்னாசி மாரைப் பெரும்படையாய்க்
கந்தனெனும் நாமம் கனத்தசடை யாண்டியுமாய்க்
கொந்துகொந்தாய்ப் பீற்றைக் கூறைமிக வணிந்து
வேலு மிகப்பிடித்து வெண்ணீறு மேதரித்து
நாலுரண்டு சிரசில் நல்லருத்தி ராச்சமிட்டுப்
பத்துரண்டு காதில் பசும்பொன்னொவ்வாச் செம்பணிந்து
முத்திரிக ளிட்டுக்கந்தப் பொக்கணங்கள் தோளிலிட்டுச்
சன்னாசி போலே தானடந் தெம்பெருமான்
நன்னாதா னாவெனவே நாலஞ்சுகவி தான்பாடி
வந்து ஒருமலைமேல் வாய்த்தகூ டாரமிட்டுச்
சந்து மிகச்சொல்லி தான்விட்டார் சூரனுக்கு
வீரவாகுதேவர் தாது
சூர னிடத்தில் தூதாநீ சென்றேகிப்
பாரமுள்ள கயிலைச் பருவதமுந் தேவருட
சிறைக ளகற்றிவானோர் தேவரையும் நீயனுப்பித் 800
திறவா னாயாகச் சீமையர சாளுமென்று
இப்படியே ஆகாட்டால் இன்றுகழித் தெட்டாம்நாள்
அப்படியே உன்றனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும்
சண்டை அன்றென்று தரங்கூறி வாவெனவே
அண்டர்பிரான் தூது அனுப்பினா ரம்மானை
தூதன் மிகநடந்து சிவனே செயலெனவே
காதமொன்று தான்கடந்து கண்டானே சூரனையும்
கந்த சுவாமி கருத்தா யுரைத்ததெல்லாம்
அந்த அசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான்
சூரா கேள்கந்த சுவாமியரு ளென்றுரைக்க
ஏராத பாவி இகழ்த்தினா னப்போது
தூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்துப்
பாரதப் பெருவிலங்கில் பாவியைவை யென்றுரைத்தான்
ஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள்
பாரடா வுன்றன் கந்தன் படுகிறதை
ஈசுரனு மென்றனுக்கு இருந்த இடமுமருளி
மாயனிடம் போயலையில் வாழ்ந்ததுநீ கண்டிலையோ
எமலோகம் வானம் இந்திரலோ கம்வரையும்
நவகோளும் நானல்லவோ நாட்ட மறிந்திலையோ
முப்பத்து முக்கோடி உற்றதே வாதிகளும் 820
நாற்பத்துநாற் கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ
அறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்ச்
சிறியனென் றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ
உன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன்
என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே
ஆனதா லென்னுடைய ஆங்கார மத்தனையும்
கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ
என்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான்
அன்று அந்தச்சூரனுக்கு அறையாம லேதுரைப்பான்
நீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி
பேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப் பிடுங்கியுன்னை
கண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக்
கொண்டோடித் தின்னவே லாயுதங் கொண்டுவந்தார்
தேவர் சிறையும் தெய்வமட வார்சிறையும்
மூவர் சிறையும் மும்முடுக்க முந்தீர்த்து
உன்னுடைய சேனை உற்றபடை யழித்து
நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி
அரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார்
துரையான கந்த சுவாமிசொல்லி யனுப்பினர்காண்
என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் 840
அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான்
ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே
போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ
சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள்
தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு
சூரன்பாடு
சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக்
காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை
வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ
சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்
கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார்
வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை
சூர னவன்கண்டு தோசப் படையணிந்து
மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான்
கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து
பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி
முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப்
பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார்
வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே
தம்பி தலைவன் தளமு மிழவாதே
பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே  860
அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு
கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து
மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது
நன்மை யதுகூட நாடுமே யல்லாது
தின்மை வராது தேவரையும் விட்டுவிடு
தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு
மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு
இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப்
புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான்
இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப்
பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு
ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது
ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை
சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப்
பண்டார மென்ற படைக்கார னும்நீயோ
என்னுடைய சேனை எல்லாமிக அழித்து
என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ
என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப்
பண்டார னோடே படையெடுத்தா னம்மானை
சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே 880
வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை
வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள்
பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு
வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே
இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து
வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து
மேலாம் பரனார் விமல னருளாலே
எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில்
பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே
சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில்
வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து
சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல்
இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே
நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல்
கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே
சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல்
விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே
மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று
பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே
என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற 900
முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால்
என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது
உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால்
வேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது
ஏலாது வுன்னாலே இளப்பமிங்கே பேசாதே
என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்
கொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை
சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி
வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது
மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம்
தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள்
ஆதியே நாதி அனாதித் திருவுளமே
சோதியே யென்னுடைய சூலசா பந்தீரும்
என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க
நன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து
சாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார்
தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க
அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து
செம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை
இரணியன் பாடு
சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித் 920
தத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த
சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து
வீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில்
பார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை
சூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில்
மாய னொருகோலம் மகவா யுருவெடுத்து
வாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும்
நெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து
வஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார்
சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில்
ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக்
கொன்னே னானென்று கூறினே னப்போது
அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய்
வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது
ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே
ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல்
வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை
என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன்
பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து
இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது 940
ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே
மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு
உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து
கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது
திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால்
பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும்
முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான்
என்று இரணியனை இரணசங் காரமிட்டு
அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை
அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில்
கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார்
செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை 953

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer