Wednesday 11 October 2017

ராமகிருஷ்ணர்

ஜீவசமாதிகள் 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14

ராமகிருஷ்ணர்

உலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் இறைவனை அடைவதற்காக தனித்தனி வழியைக் காட்டுகின்றன. இந்த சமயங்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், எந்தவொரு வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவது போல, சமயங்கள் அனைத்தும் இறைவனை அடையும் அன்பிற்குரிய பாதைகள்தான் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றும் வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தின் தேரே எனும் கிராமத்தில் குதிராம், சந்திரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். தேரே ஊரின் ஜமீன்தார் வழக்கு ஒன்றில் அவருக்குச் சாதகமாக, உண்மைக்கு மாறாக பொய்சாட்சி சொல்ல வேண்டுமென்று குதிராமைக் கட்டாயப்படுத்தினார். குதிராம் பொய்சாட்சி சொல்ல முடியாது என்று மறுத்தார். இதனால் கோபமடைந்த ஜமீன்தார் பல வழிகளில் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார். குதிராம் தொடர்ந்து அந்த ஊரில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, குதிராம், சந்திரமணி தம்பதியினர் அந்த ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த கமார்புகூர் எனும் மற்றொரு கிராமத்திற்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.

கமார்புகூருக்குச் சென்று வசித்து வந்த குதிராம், சந்திரமணி தம்பதியருக்கு 1836 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அன்று நான்காவது குழந்தை பிறந்தது. நான்காவதாகப் பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றானகதாதரர்என்று பெயர் வைக்கப்பட்டது. கதாதரர் வளர்ந்து சிறுவனானதும், அந்த ஊரின் அருகிலிருந்த மாந்தோப்பிற்கு விளையாடச் சென்று விடுவான். சாதீயக் கொடுமைகள் அதிகமிருந்த அந்தக் காலகட்டத்தில், அனைத்து சாதிச் சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டு விளையாடுவான். அவனிடம் எவ்விதச் சாதிப் பாகுபாடுகளும் இல்லை. அந்த கிராமத்திலிருக்கும் அனைத்து சாதியினரிடமும் அன்பாக இருப்பான். இதனால் கிராமத்திலிருந்த அனைத்து சாதியினரிடமும் அவன் நற்பெயரைப் பெற்றான்மேற்கு வங்க மாநிலத்தில் கூத்தாடிகள் ஊர் ஊராகச் சென்று ராமாயணம், மகாபாரதம், பதிணென் புராணங்கள் போன்றவற்றிலிருந்து ஏதாவது ஒரு கதையை நடித்துக் காட்டி, மக்களிடம் பணம் பெற்றுக் கொள்வார்கள். இந்தக் கூத்தாடிகள் மூலம், எழுதப் படிக்கத் தெரியாத பலருக்கும் புராணக் கதைகள் நன்றாகத் தெரியும். கதாதரருக்குக் இந்தக் கூத்து பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் கமார்புகூருக்கு அருகில் எந்தக் கிராமத்தில் கூத்து நடந்தாலும் அங்கு சென்று விடுவான். கூத்தைப் பார்த்து விட்டு வந்து, அதைப் போல் நடித்துக் காண்பிப்பான். சில சமயம், தம் நண்பர்களை அழைத்துக் கொண்டு மாந்தோப்பில் அதைப் போல நாடகம் நடத்திப் பார்ப்பான்.

கதாதரர் ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்துராதா சோகம்என்ற நாடகத்தை நடத்தினான். இந்நாடகத்தில் கதாதரர் ராதை வேடமும், மற்றவர்களுக்கு தோழி வேடங்களும் போடப்பட்டன. இந்நாடகத்தில், கிருஷ்ணர் பிரிவால் வாடும் ராதைக்குப் பிராணபயம் நேரிடுமெனக் கண்டு கொண்ட தோழிகள், தங்களுள் ஒருத்தியான பிருந்தையைக் கிருஷ்ணரிடம் தூது அனுப்புவதாக ஒரு காட்சி உண்டு. இக்காட்சியில் பிருந்தையாக வேடம் கொண்டவன், ராதையாக வேடம் கொண்ட கதாதரரிடம் சென்று, “நான் கிருஷ்ணரிடம் போய் என்ன சொல்வது?” என்று கேட்டான். கதாதரர் எந்தப் பதிலும் சொல்லாமல், கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்லியபடி மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டான். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. கதாதரர் தன்னை ராதை வேடம் கொண்டவன் என கருதாமல், உண்மையிலேயே கிருஷ்ணரைப் பிரிந்த ராதையாகத் துயரமடைந்தான். இவர் துயரமடைந்த நிகழ்வு, கண்ணபிரான் உரலுடன் சேர்த்துப் பிணிக்கப்பட்டதைக் கேட்டு, “எத்திறம் உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவேஎன்று ஸ்ரீ நம்மாழ்வார் மூர்ச்சித்துக் கிடந்தது மற்றும் ஸ்ரீ ராமபிரான் தனிமையில் கரதூஷணாதியருடன் போர் செய்கிறார் என்பதைக் கேட்டதும் சதுரங்க சேனைகளை அழைத்துக் கொண்டு உதவிக்கு ஸ்ரீ குலசேகராழ்வார் புறப்பட்டது போன்ற மனநிலைக்கு ஒப்பாகக் கொள்ளப்படுகிறது.

கதாதரருக்கு சிறுவயதிலிருந்தே உலகப்பற்று இல்லாமலிருந்தது. சன்னியாசிகளைக் கண்டால் போதும் அவருக்குள் தனி மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் பேசுவதும், அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் என்று அவர்களுடன் நெருக்கமாகி விடுவான். ஒருநாள் அவரது தாய் அவருக்குப் புது ஆடை கொடுத்து உடுத்தச் சொன்னார். அவர் அந்தப் புது ஆடையை உடுத்திக் கொண்டு ஜகன்நாத் யாத்திரை செல்லும் சாதுக்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவர்களைப் பார்த்தான். அவர்கள் அனைவரும் கௌபீனம் (கோவணம்) அணிந்திருந்ததைப் பார்த்ததும், தன் புது ஆடையை இரண்டாகக் கிழித்து தானும் கௌபீனம் அணிந்து கொண்டான். அப்படியே, அவனது தாயிடம் சென்று, “அம்மா, நானும் கௌபீனம் அணிந்து சன்னியாசியாகி விட்டேன்என்றான். அவன் தாய் ஒன்றும் சொல்லவில்லை. கதாதரர் பிறந்த பின்புதான் அவர்கள் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறி, ஓரளவு நல்ல நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அவன் என்ன செய்தாலும், அவனுடைய வீட்டிலிருப்பவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.

குழந்தைப் பருவத்திலேயே ஆடல், பாடல்களிலும், கேளிக்கைகளிலும் பற்றுடையவராக இருந்த அவன் ஓவியங்கள் வரைவதிலும், மண் சிலைகள் செய்வதிலும் திறனுடையவராக இருந்தான். உடைந்து போன மண் சிலைகளை சரி செய்வது, சிலைகளுக்கு வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை விருப்பத்துடன் செய்வான். அந்த சிலைகள் கடவுள் சிலைகளாக இருந்தால் அதை வடிவமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டுவான். குழந்தையாக இருந்த போதே அவனுக்கு கடவுள் மீது ஈடுபாடு அதிகமாக இருந்தது. அவனுக்கு ஒன்பதாவது வயதில் உபநயனம் செய்ய வேண்டி வந்தது. அவர்கள் சமூகத்தில், உபநயனத்தின் போது உயர் குலத்தில் பிறந்த பெண்ணிடம் பிச்சை ஏற்க வேண்டும் என்கிற வழக்கம் இருந்தது. ஆனால், கதாகரர் தனக்குப் பிடித்தமான ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம்தான் பிச்சை ஏற்பேன் என்று பிடிவாதம் பிடித்தான். வீட்டிலிருப்பவர்களும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தனர். குழந்தையாக இருந்த போதேஅனைவரும் சமம்என்கிற சமநிலைக் கருத்தை வெளிப்படுத்தி, அக்கிராமத்து மக்களின் செல்லப் பிள்ளையாக இருந்தார்.

கதாதரரின் சகோதரர் ராமகுமாரர் கல்கத்தாவில் ஏற்படுத்தி இருந்த பாடசாலையில் சேர்ந்து படிக்கும்படி அவரைத் தூண்டினார். அவரும் அங்கு சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அவருக்கு, அங்கு நடந்த வீண் வாதங்கள் அந்தக் கல்வி மேல் வெறுப்பு ஏற்படச் செய்தது. வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை விட, வாழ்க்கையில் ஈசுவரனை அடையும் வழிக்கான கல்வியே தனக்குத் தேவை என்று சொல்லி பாடசாலைக்குச் செல்ல மறுத்து விட்டார்.   அதன் பிறகு கிராமத்தில் இருந்த இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். ஆனால், அந்த சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார். இந்நிலையில், கல்கத்தாவிற்கு வடக்கே ஐந்து மைல் தொலைவிலிருந்த தட்சிணேசுவரம் எனும் இடத்திலிருந்த காளி கோயில் ஒன்றில் அர்ச்சகராக இருந்த அவர் சகோதரர் ராமகுமாரர், கதாதரரை உதவிக்கு அழைத்துச் சென்றார். அந்தக் கோயிலில் சகோதரருக்கு உதவியாகச் சில பணிகளைச் செய்த அவருக்கு அந்தப் பணி மிகவும் பிடித்துப் போனது. அந்தக் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை உடனே சாப்பிட மாட்டார். அந்த பிரசாதத்தைக் கங்கைக் கரைக்குக் கொண்டு சென்று சுயம் பாகம் செய்து சாப்பிடுவார்.

சில ஆண்டுகளில், அவரது சகோதரர் ராம்குமார் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அதன் பிறகு கதாதரர், அந்தக் காளி கோயிலின் அர்ச்சகரானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார். காளி பூஜை செய்வதில் அவர் காட்டிய பக்திக்கு அளவேயில்லை. அவர் காளியை தமது தாயாகவே நம்பினார். தாயைப் பார்த்துக் குழந்தை கொஞ்சுவது போல் பேசுவார். பின்னர் மந்திரங்கள் சொல்வார். ஆடுவார், பாடுவார். காளி தேவி தனக்குக் காட்சி அளிக்கவில்லையே என மனங்கசிந்து அழுவார். சில வேளைகளில் பக்தியுடன் காளி பூசைக்கு வைத்திருக்கும் பூக்களைத் தம் தலையிலே போட்டுக் கொள்வார். ஆரத்தி முடியும் காலம் முடிந்த பிறகும் கூட ஆரத்தியைச் சுற்றிக் கொண்டே இருப்பார். இப்படி வித்தியாசமான செய்கைகளால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள். சிலர் கமார்புகூரிலிருந்த கதாதரரின் வித்தியாசமான செயல்கள் குறித்து அவருடைய தாய்க்குத் தகவல் அனுப்பினார்கள்அவருடைய தாயும் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தால், மகனின் பைத்திய நிலை மாறும் என நினைத்தார். உடனே அவர் தன் மகனை தட்சினேஸ்வரத்திலிருந்து கமார்புகூருக்கு வரும்படி தெரிவித்தார். தாயின் வேண்டுகோள்படி கமார்புகூருக்குச் சென்ற கதாதரருக்கு, அவரது தாய், ராமச்சந்திர மகோபாத்தியாயர் என்பவரின் ஐந்து வயது மகளான சாரதாமணி தேவி என்பவரைத் திருமணம் செய்து வைத்தார்.

திருமணத்திற்குப் பிறகு தட்சினேஸ்வரம் திரும்பிய கதாதரர் மீண்டும் காளி கோயிலில் அர்ச்சகராகப் பணியைத் தொடர்ந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அவருடைய வித்தியாசமான செயல்கள் தொடர்ந்தன. அவரின் செயல்கள் முன்பை விட அதிகமானது. காளியை நோக்கி, “தாயே, எனக்கு எப்போது காட்சி தருவீர்கள்?” என்று கதறி அழுவார். அங்கிருந்த பலரும் இவருக்குப் பைத்தியம்தான் பிடித்து விட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அவரை டாக்கா நகரத்திலிருந்த வைத்தியர் ஒருவரிடம் கொண்டு போய்க் காண்பித்தனர். அந்த வைத்தியர், “இவருக்குப் பைத்தியம் எதுவும் பிடிக்கவில்லை. கடவுள் பற்று அதிகமாகி இருக்கிறது. வேறொன்றுமில்லைஎன்று சொல்  அனுப்பினார்.அதன் பிறகு பூசை செய்து வந்த கதாதரருக்கு, தாம் கல்லைத்தான் பூசை செய்கிறோமா, அல்லது உயிருள்ள இறைவனையா என்று சிந்தனை எழுந்தது. தனக்குக் காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சி...களுக்கு எந்தப் பலனுமில்லை. இதனால் பொறுமையை இழந்த அவர் ஒரு நாள், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். கதாதரரின் தீவிரமான பக்தியில் மனமிரங்கிய காளி தேவி அவர் முன்பு தோன்றினார். கதாதரர் மெய்மறந்து தரையில் வீழ்ந்தார். இரண்டு நாட்கள் வரை அப்படிக் கிடந்த அவர் பின்னர் எழுந்ததும் தனக்குள் பேரானந்தம் பெருகியிருப்பதையும் உணர்ந்தார்.

கதாதரர் பணியாற்றிய காளி கோயிலின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு என்பவர் இருந்து வந்தார். அவர் ஒரு நாள் கதாதரரைச் சந்திக்க அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். கதாதரர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழையப் போனார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே கதாதரரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. அவர் நம்ப முடியாமல் தன் கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தார். அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். அவர் அப்படியே உறைந்து போனார். கதாதரர் அறையின் எல்லைக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. கதாதரர் காளியாகவும், சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு ஆச்சரியத்துடன் அங்கேயே நின்று கொண்டார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது நம் கற்பனையா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே இருந்த அவர் தன் கையைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். மீண்டும் அறைக்குள் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கே கதாதரர் சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார். அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் பயந்து போய் திரும்பி விட்டார். சிறிது நேரம் கழித்து கதாதரர் கோயிலுக்கு வந்தார். மதுர்பாபு கதாதரரிடம், தான் கண்ட காட்சியைப் பற்றிச் சொன்னார். ஆனால் கதாதரர், அதனைஆம்என்று ஒப்புக் கொள்ளவுமில்லை. ‘இல்லைஎன்று மறுக்கவுமில்லை. “எனக்கு ஏதும் தெரியாது! எல்லாம் இறைவன் செயல்என்று மட்டும் கூறினார்.

மதுர்பாபு, தான் நேரில் கண்ட காட்சியைப் பற்றி பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார். கதாதரர் சாதாரண மனிதனல்ல அவர் பரமனின் அம்சமானவர் என்பதை உணர்ந்தார். அதன் பிறகு கதாதரரை பரமஹம்சர் என்றே அழைத்தார். பரமஹம்சர் நிர்விகல்ப சமாதியை அடைய வேண்டும் என்று விரும்பினார். அதற்காகக் கடுமையான தவத்தை மேற்கொண்டார். இக்காலத்தில் உணவு உண்ணாமல் பல நாட்கள் இருப்பார். சில வேளைகளில் பிறரறியாமல் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வீட்டுக்குள் சென்று துடைப்பம் எடுத்து பெருக்குவார். அப்படியே, “தாயே, நான் பெரியவன் என்றும், பிராமணன் என்றும், இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் நினைக்கிற மனோபாவம் என்னிடம் இருக்க வேண்டாம். இவர்கள் அனைவரும் பிரம்ம வடிவம் என்கிற எண்ணம் எனக்கு உண்டாகும்படி அருள் புரிய வேண்டும்என்று பிரார்த்தனை செய்வார். நிர்விகல்ப சமாதி நிலைக்கு வழிகாட்ட தனக்கு குரு எவருமில்லையே என பரமஹம்சர் வருத்தமடைந்தார். இந்நிலையில் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி ஒருவர் தட்சினேஸ்வரத்திற்கு வந்தார். அவர் பரமஹம்சருக்குக் கடுந்தவத்தால் ஏற்பட்ட தேக எரிச்சலையும், தீராப்பசியையும் போக்கி யோகாப்பியாசத்தின் இரகசியங்களைக் கற்றுக் கொடுத்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் அதில் தேர்ச்சியடைந்தார். அதன் பிறகு, பரமஹம்சர் அனைத்து ஞானங்களையும் உணர்ந்து ஞானியாக வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பத்திற்கேற்ற குரு கிடைக்காமல் கவலைப்பட்டார். இந்நிலையில், தோதாப்புரி என்ற ஒரு மகான், இவருக்கு குருவாக இருந்து வேதாந்த ரகசியங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுக்க முன் வந்தார். அவர் கதாதரருக்கு வேதாந்த ரகசியங்கள் அனைத்தையும் உபதேசித்தார்.

பரமஹம்சர் அவருடைய உபதேசப்படி மூன்று நாட்கள் அப்பியாசம் செய்து நிர்விகல்ப சமாதி நிலை அடையப் பெற்றார். தோதாப்புரி நாற்பது வருடங்கள் கஷ்டப்பட்டு அடைந்த நிர்விகல்ப சமாதி நிலையை பரமஹம்சர் மூன்று நாட்களிலேயே பெற்றதைக் கண்டு ஆச்சர்யமடைந்தார். தோதாப்புரி ஆச்சர்யத்துடன், “பரமஹம்சரே, இனி நீ எனக்கு சீடனல்ல. எனக்கு சமானன்என்று கூறி அவருடன் சில காலம் தங்கியிருந்தார். அப்போது இருவரும் தமக்குத் தெரிந்த விசயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவரிடமிருந்து தோதாப்புரி விடை பெற்றுச் சென்றார். தோதாப்புரி மகான் சென்ற பிறகு, பரமஹம்சர் ஆறு மாத காலம் நிர்விகல்ப சமாதி நிலையில் இருந்தார். அதனால், அவருக்குக் கடுமையான ரத்தக் கடுப்பு உண்டாயிற்று. அவரது உடல்நிலை குணமானதும், அவருடைய பக்தி நிலை மாற்றம் கண்டது. இந்து சமயம் தவிர, பிற சமயங்களான இசுலாம், கிறித்தவம் போன்ற இதர தர்மங்களையும் கடைப்பிடிக்கத் தொடங்கினார். அதன் மூலம் பல தரிசனங்களைக் கண்ட அவர் அனைத்து சமயங்களும் உண்மை என்றும், கடவுள் ஒன்றே என்றும் உணர்ந்தார்.  

ஒவ்வொரு சமயத்தின் வழிபாட்டு முறைகளும், தர்ம முறைகளும் வேறுபாடுகளுடையதாக இருக்கின்றன. கடவுள் ஒருவரே. வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்தான். யார் எந்த முறையைப் பின்பற்றினாலும் அவர்கள் தேடும் கடவுளை அடைய முடியும்.” என்று பரமஹம்சர் தெளிவுபடுத்தினார். இந்நிலையில் பரமஹம்சரின் மனைவி சாரதாமணி தேவிக்கு 18 வயது ஆகியி...ருந்தது. அப்போது, அவரது கணவர் பைத்தியமாக இருப்பதாகச் சிலர் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு அவர் மன வருத்தமடைந்தார். அவர் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கமார்புகூரிலிருந்து தட்சினேஸ்வரம் வரை கால்நடையாக நடந்து வந்து கணவரைக் கண்டார். பரமஹம்சர் அவரைப் பிரியமுடன் வரவேற்றார். பரமஹம்சர் அவரிடம், “உன்னை மணந்த கதாதரன் இறந்து விட்டான். இப்போது இருக்கும் பரமஹம்சன் எந்தப் பெண்ணையும் மனைவியாக ஏற்பதில்லை. உன்னிடம் என் தாய் காளியைத்தான் காண்கிறேன்.” என்றார். சாரதாமணி தேவியும், “தாங்கள் என்னை மனைவியாக ஏற்க வேண்டாம். தங்களுக்குப் பணிவிடை செய்யும் சீடராக ஏற்றுக் கொண்டு, தங்களுக்கு அருகில் இருக்க அனுமதியளிக்க வேண்டும்என்று வேண்டினார். பரமஹம்சரும் அதற்கு சம்மதித்தார். சாரதாமணி தேவி அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வாழத் தொடங்கினார்.

காளி கோயில் நிர்வாகியாக இருந்த மதுர்பாபு குடும்பத்தினர் புனித யாத்திரை செல்ல விரும்பினர். அவர்கள் பரமஹம்சரையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் வைத்தியநாதம் என்னும் ஊரில் இருந்த மக்கள் உண்ண உணவு இல்லாமலும் உடுக்கத் தேவையான ஆடை இல்லாமலும் இருப்பதைக் கண்டு மன வருத்தமடைந்தார். அவர்களுடைய குறைகளைத் தீர்த்தால்தான் தாம் புனித யாத்திரையைத் தொடரமுடியும். இல்லையெனில் தன்னால், புனித யாத்திரைக்கு வர முடியாது என்று மதுர்பாபு குடும்பத்தினரிடம் தெரிவித்தார். மதுர்பாபு குடும்பத்தினரும், அந்த ஊரிலிருந்த அனைவருக்கும் புதிய ஆடைகள் எடுத்துக் கொடுத்தும், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தும் பரமஹம்சரின் விருப்பத்தை நிறைவேற்றினர். அதன் பிறகு அவர்களது புனித யாத்திரை தொடர்ந்தது. புனித யாத்திரையில் காசிக்குச் சென்ற பரமஹம்சருக்குக் காசியில் புகழ் பெற்று விளங்கிய திரைலிங்க சுவாமிகள் முதலிய பல மகான்களுடன் நட்பு ஏற்பட்டது. பரமஹம்சருக்குப் பிருந்தாவனத்திலேயே தங்கி விட வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது. ஆனால், காளிதேவியைப் பிரிய மனமில்லாமல் தட்சினேஸ்வரத்துக்குத் திரும்பி வந்து விட்டார்.

அதன் பிறகு பரமஹம்சருடைய காலம் முழுவதும் அவரைத் தேடி வருபவர்களுக்கு உபதேசங்கள் செய்வதில்தான் கழிந்தன. அவரைத் தரிசித்து, ஞானோபதேசம் பெறுவதற்காக வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பரமஹம்சர் அன்பு மயமானவர். அவருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனால், அவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த புகழ் இருந்தது. கேசவ சந்திர சென் என்பவர் அப்போது இந்தியாவில் இருந்த சிறந்த அறிவாளிகளுள் ஒருவராக இருந்தார். அவர் படிக்காத பரமஹம்சருக்கு இருந்த புகழ் கண்டு பொறாமை கொண்டார். அவரிடம் வாதம் செய்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்க வேண்டும் என்று கருதி அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றார். எல்லோருமே பரமஹம்சர் தோல்வி அடைவது உறுதி என்று கருதினர். பரமஹம்சரின் சீடர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் குருவோ சிரித்துக் கொண்டிருந்தார். சென், ”கடவுள் இல்லைஎன்பதற்கான வாதங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தார். பின் அவர் ராமகிருஷ்ணரிடம், ”கடவுள் இருக்கிறாரா?” என்று கேட்டார். அவரோ சென் சொல்ல விரும்புவதை எல்லாம் மொத்தமாக சொல்லச் சொன்னார். சென் வாதங்களை சொல்லிக் கொண்டே போக பரமஹம்சரோ வெகுவாக அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போதுபிரமாதம், பிரமாதம்! சரியாகச் சொன்னீர்கள்!’ என்று பாராட்டிக் கொண்டிருந்தார். சென்னுக்கோ ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை. நீண்ட நேர உரைக்குப் பின் அவர் பரமஹம்சரிடம், ”இப்போது சொல்லுங்கள் கடவுள் இருக்கிறாரா, இல்லையா?” என்று கேட்டார். எல்லோரும் பரமஹம்சர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர் சொன்னார், ”நண்பரே! இதுவரை எனக்குக் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு அந்த சந்தேகம் முழுமையாகத் தீர்ந்து விட்டது. கடவுள் உறுதியாக இருக்கிறார்என்று இப்போது நம்புகிறேன்.” எல்லோரும் புரியாமல் விழிக்க அவர் தொடர்ந்தார், ”கடவுள் இல்லாமல் ஒருவருக்கு எப்படி இவ்வளவு ஞானம் வரும்? எவ்வளவு தெளிவான பேச்சு! நான் ஒரு படிக்காதவன், ஏழை. என்னை மாதிரி சாதாரணமான ஆளைப் படைக்கக் கடவுள் தேவையில்லை. ஆனால் உங்களைப் போல ஞானம் படைத்தவர் கடவுள் இல்லாமல் எப்படி வர முடியும்? சாத்தியமே இல்லை.” கேசவர் உடனே தலை குனிந்து பரமஹம்சரின் பாதத்தில் விழுந்தார். அதன் பிறகு பரமஹம்சருக்கும் கேசவ சந்திர சென்னுக்குமிடையில் நட்பு உருவானது. பிரம்ம சமாஜம் அமைப்பின் தலைவரான கேசவ சந்திர சென் பரமஹம்சரின் அற்புதங்களைப் பல இடங்களில் வெளியிடத் தொடங்கினார். அதன் பிறகு பரமஹம்சரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் மேலும் அதிகமானது. இதனால் கேசவ சந்திர சென்னுக்கும், பரமஹம்சருக்கும் நெருக்கம் அதிகமானது. பிரம்ம சமாஜம் அமைப்பினர் ஈசுவரனைத் தாயாக நினைத்து வழிபடும் கொள்கை பரமஹம்சரின் வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதே. பரமஹம்சரின் உபதேசங்களைக் கேட்க கல்கத்தாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். அவரைத் தேடி வந்து தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். இப்படி வேண்டிச் சீடராகச் சேர்ந்து கொண்டவர்களில் நரேந்திரன் என்பவரும் ஒருவர். இந்த நரேந்திரன்தான் பின்னாளில், ஒரு மகானாக, விவேகானந்தராக உயர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ராமகிருஷ்ணரின் சிறப்புக்கு முக்கியக் காரணம் அவர் எந்த சமய வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல், எந்த சமய வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவத... போல, சமயங்கள் அனைத்தும் இறைவனை அடையும் அன்பிற்குரிய பாதைகள்தான் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தடைகள், அதைத் தகர்த்து உண்மை அறிய பின்பற்றவேண்டிய வழிமுறைகள், நம்மாலும் மகிச்சியாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கையை ராமகிருஷ்ணர் வாழ்க்கையும், அவர் அளித்த உபதேசங்களும் நமக்கு வழங்குகினறன.


மனித வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டிய ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு 1885 ஆம் ஆண்டில் தொண்டைப் புற்றுநோய் தாக்கியது. சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஒன்றும் செய்யாமல் படுத்த படுக்கையாக இருந்தால் குணமடைய முடியும் என்று தெரிவித்தனர். ஆனால் தன்னைத் தேடி வருபவர்களுக்கும், தன் உபதேசங்களைக் கேட்க வருபவர்களுக்கும் தன்னுடைய பேச்சுதான் ஆறுதலாக இருக்கும் என்றார். தன்னைத் தேடி வரும் மக்களைத் திருப்பிப் போகச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. தன் தொண்டை புண்ணாக இருந்த நிலையிலும், திரவ நிலையிலான உணவைக் கூட உட்கொள்ள முடியாத நிலையிலும் அவர் உபதேசத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். இதனால் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தொண்டைப் புண் மேலும் அதிகமானது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்கள், அவருடைய தொண்டைப் புண் நோயைக் குணப்படுத்தி விட வேண்டும் என்கிற ஆவலுடன் அவரை கல்கத்தாவிற்கு அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று, தனியாக சிகிச்சை அளித்தனர். ஆனால், அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அதிகாலையில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரின் உபதேசங்களும், அவர் சொன்ன கதைகளும் இன்றும் சிந்திக்கக் கூடியதாக இருக்கின்றன.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer