Wednesday 11 October 2017

பாஸ்கர ராயர்

ஜீவசமாதிகள் 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14
பாஸ்கர ராயர்


பாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை இருக்கலாம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார். அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார்.

இவருக்கு வித்யையை உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வென்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பியிருக்க வேண்டும். அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது.

பாஸ்கரராஜபுரத்தில் வெகுகாலம் வசித்து, அம்பாளின் உபாசனையில் திளைத்து, தமது இறுதிக்காலத்தை மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூரில் கழித்த பாஸ்கரராயர், அங்கு தமது 95-வது வயதில் தேவி சரணங்களை சென்றடைந்தார். அவர் காலத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேச்வர் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார். இந்த ஆலயம் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் உள்ள  திருவாலங்காடு அருகே அமைந்துள்ளது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் தலைசிறந்தவரான பாஸ்கரராயர் அம்பாளின் வரப்பிரசாதத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறார். நமது சநாதன வைதீக மார்க்கத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தவர். குப்தவதீ என்னும் தமது சப்தசதீ வியாக்கியானத்தில் ஆதிசங்கர பகவானை வெகுவாகத் தோத்திரம் செய்துள்ளார். பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல எழுதியுள்ளார் என்றும், அவற்றில் பெரும்பகுதி தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவியம், சுருதி, ஸ்மிருதி, புராணம், தோத்திரங்கள், மந்திர சாஸ்திரம் முதலிய துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்களை ஆராய்ந்தோர், இம்மகானுக்குத் தெரியாத வித்தையோ, சாஸ்திரமோ இல்லை என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள். மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்கள் பற்றி அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. மந்திர சாஸ்திரத்திலேயே பதினேழு நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவற்றில் ஒன்றுதான் சௌபாக்ய பாஸ்கரம் என்ற லலிதா சகஸர நாமம் விளக்க உரை நூல். இவர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதியதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள். அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு "சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார். அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர், கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம், மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம், தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது, வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.

பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உபாசனை செய்து வந்திருக்கிறார். இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.


பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் கூறப்படுவது உண்டு. அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பது வழக்கம். அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். ஆனால், பாஸ்கர ராயர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யமாட்டார். இது அவ்வூர் மக்களுக்கு சற்று வியப்பை ஊட்டியது. சிலர் ஆத்திரமடைந்தார்கள். ஒருநாள் கோயிலில் பாஸ்கர ராயரும் அந்த சந்நியாசியும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், துறவியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதற்கு பாஸ்கரராயரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது பாஸ்கரராயர், இல்லறத் தர்மத்தின்படி தாம் சந்நியாசிக்கு நமஸ்காரம் செய்திருந்தால், அவரது தலை சுக்கு நூறாக உடைந்திருக்கும் என்றும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். பின்னர் அதை நிரூபிப்பதற்காக அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் முதலியவற்றை ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்தார். அடுத்த கணம் அவை மூன்றும் சுக்கு நூறாக உடைந்து சிதறின. அதைக் கண்டதும் அத்துறவி பாஸ்கரராயரின் மகிமையை உணர்ந்தார். பொது மக்களும் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer