Saturday 11 November 2017

அருள்மிகு ஆபத் சகாய சுந்தர விநாயகர் திருக்கோயில், வடவள்ளி, கோயம்புத்தூர்.

அருள்மிகு ஆபத் சகாய சுந்தர விநாயகர் திருக்கோயில்




மூலவர்          :               ஆபத் சகாய சுந்தர விநாயகர்
                உற்சவர்          :               விநாயகர்
                அம்மன்/தாயார்      :               -
                தல விருட்சம்           :               ஆலமரம், அரசமரம், வேம்பு
                தீர்த்தம்           :               -
                ஆகமம்/பூஜை          :              
                பழமை             :               500 வருடங்களுக்குள்
                புராண பெயர்              :              
                ஊர்      :               வடவள்ளி
                மாவட்டம்    :               கோயம்புத்தூர்
                மாநிலம்         :               தமிழ்நாடு

                பாடியவர்கள்:           
                                 
                                 
                                 
                 திருவிழா:   
                                 
                இக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி, திருவோணம், சஷ்டி, கிருத்திகை அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய விழாக்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றாலும் முக்கிய வருட பெருவிழா விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகின்றன.               
                                 
                 தல சிறப்பு
                                 
                                                   
  
                                               
                                 
                திறக்கும் நேரம்:     
                                 
                காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.       
                                 
                முகவரி:        
                                 
                அருள்மிகு ஆபத் சகாய சுந்தர விநாயகர் திருக்கோயில், வடவள்ளி, கோயம்புத்தூர்.        
                                 
                                 
                 பொது தகவல்:        
                                 
                சிறிய கருவறையில் திருவாச்சியுடன் ஒரே கல்லில் மிக்க அழகுடன் வடிக்கப்பட்ட வலம்புரி விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளிஉள்ளார். அர்த்த மண்டபத்தில் குருவாயூரப்பன் மற்றும் முருகப் பெருமான் வீற்றுள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் விஷ்ணு துர்க்கை அருள் புரிகின்றனர். முன் மண்டபத்தில் மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றிவைக்கும் அபீஷ்ட சுந்தர ஆஞ்சநேயர், நவகிரஹங்கள் விமானத்துடன் கூடிய தனிசன்னிதிகளில் உள்ளனர்.      
                                 

                பிரார்த்தனை            
                                 
                தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இங்கு பிரார்த்திக்கின்றனர்.    
                                 
                நேர்த்திக்கடன்:       
                                 
                விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது
                                 
                 தலபெருமை:          
                                 
                அருகில் உள்ள பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தேர்வுக்குச் செல்லும் முன் ஆஞ்சநேயரை வழிபட்டு சென்று தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்களாம். ஆரம்ப காலத்தில் திருப்பணி செய்த குழந்தைகள் தற்போது நல்ல உத்தியோகத்தில் வெளிநாட்டிலும் இங்கும் வசதியாக உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.      
                                 
                  தல வரலாறு:         
                                 
                கோவை வடவள்ளி கொண்டாமுத்தூர் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்த குடியிருப்பு கியூரியோ கார்டன் அவின்யூ. தூய காற்று, அமைதியான சூழல், போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதி. இங்கு குடியிருப்பு பகுதியாக உருவாக்கப்பட்ட போது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் வங்கி அதிகாரிகள், சிறு தொழிலதிபர்கள் என பலரும் இடம் வாங்கி குடியேறினர். குடி புகுந்த பின் அங்கு ஒரு கோயில் இல்லையே என்பது அனைவரின் மனக்குறையாக இருந்தது. அனைவரும் ஒன்றுகூடிப் பேசி ஒரு விநாயகர் கோயில் கட்ட முடிவு செய்தனர். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பழுத்த பழமான பெரியவர், கோயில் கட்டுவதென்பது வீடுகட்டுவதைப் போல் எளிதான காரியமில்லை. இந்த காலனியில் கோயில் கட்டலாமா? வேண்டாமா? இங்கு நாம் அமைக்கவிருக்கும் கோயிலில் முழுமுதல் கடவுளான விநாயகர் அமர அவருக்கு விருப்பமா? இல்லையா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்றார்.

இதை எப்படி தெரிந்து கொள்வது என வினவ, பிரசன்னம் பார்க்க வேண்டும். பிரசன்னம் என்பது முழுமையான நம்பிக்கைக்குரிய ஒன்று. மேலும் கோயில் கட்டும் முன் பிரசன்னம் பார்க்க வேண்டும் என்பது ஆகம விதிகளில் ஒன்று என்றார். அடுத்த வாரமே 5 பேர் கொண்ட குழுவினர் கேரளாவை நோக்கி பயணமானார்கள். ஒரு பழமையான கிராமத்தில் பழுத்த பழமாய் விளங்கிய பிரசித்திபெற்ற நம்பூதிரி ஒருவர் வீட்டில் பிரசன்னம் பார்க்க அமர்ந்தனர். நம்பூதியிடம், நாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் ஒரு விநாயகர் கோயில் கட்டவேண்டும். அதற்கு தாங்கள் பிரசன்னம் பார்த்து ஆலோசனை கூறுங்கள் என்றனர். சிறிது நேரம் கண்களை மூடி தியானித்து விட்டு வெண்மை நிறங்கொண்ட சோழிகளை உருட்டிப் போட்டார். தொடர்ந்து 4/5 முறை அவ்வாறு போட்டு பார்த்துவிட்டு கண்களை மூடி மறுபடியும் தியானித்து விட்டு தொடர்ந்தார்,

 நீங்கள் வசிக்கும் பகுதியில் ஆலமரம், அரசமரம், வேப்ப மரம் ஆகிய மூன்றும் இணைந்த காலியான நிலப்பரப்பு உள்ளதா? என்றார். ஐவரும் குழம்பிப்போய் யோசித்து விட்டு, அப்படி ஒரு நிலப்பரப்பு இல்லையே என்றனர். எனது பிரசன்னம் என்றும் பொய்க்காது, நிதானமாய் யோசித்து சொல்லுங்கள். அனைவரும் ஒவ்வொரு பகுதியாக நினைவுபடுத்தி ஆலோசனை செய்தனர். பின் அக்குடியிருப்பு பகுதியின் தென்புறத்தில் சுமார் 10 சென்ட் பரப்பளவுள்ள இடம் இருப்பதும் அதில் அம்மூன்று மரங்கள் இருப்பதையும் நினைவு கூர்ந்து நம்பூதிரியிடம் தெரிவித்தனர். மேலும் அவ்விடம் சுத்தமாக இல்லை என்ற தகவலையும் வெளிப்படுத்தினர். இதைக் கேட்ட நம்பூதிரியின் முகம் மலர்ந்தது. புன்முறுவலுடன் தற்போது சுத்தமில்லாமல் இருக்கலாம் ஆனால் முற்காலத்தில் அது ஒரு புனிதமான, பவித்திரமான இடமாக இருந்தது. அதில் முனிவர் ஒருவரின் தபோவனமும் பின் வேத கோஷங்கள் முழங்கிய வேத பாட சாலையாகவும் இருந்தது.

விநாயகப் பெருமானுக்கு வெள்ளெருக்கு வேரில் வாசம்செய்ய மிகவும் பிடிக்கும். வேத பாடசாலையாக இருந்த அந்த இடம் முன்பு வெள்ளெருக்கு வனமாக இருந்தது. வெள்ளெருக்கு பூக்கள் கொத்து கொத்தாய் பூத்துக் குலுங்கிய அந்த இடம் தான் ஆல், அரசு வேம்பு ஆகிய மூன்றும் இணைந்த தெய்வீக அம்சம் பொருந்திய இடமாக உள்ளது. ஐயா, கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை எங்கள் மனதில் நிரம்பவே இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்குப் பணம் எங்கள் கையில் இல்லை. ஆரம்பித்து விட்டு நடுவில் நின்று விடுமோ என்ற அச்சம் மிகுதியாக உள்ளதே என்றனர். இந்த இடத்தில் கோயில் கட்டுங்கள் அங்கே அமரும் விநாயகப் பெருமான் அருளையும் செல்வத்தையும் வாரி வழங்குவார். குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவார் நீங்கள் கவலைப்படவேண்டாம். கையில் உள்ள பணத்தை வைத்து வேலையைத் தொடங்குங்கள். பணம் தானாவே வந்து சேரும். திட்டமிட்டதற்கு முன்பாகவே கட்டி முடித்து கும்பாபிஷேகத்தையும் நடத்தி விடுவீர்கள் என உறுதியளித்தார். விடைபெறும் முன் பிரசன்னம் பார்த்தற்காக பணம் கொடுத்த போது அதை வாங்க மறுத்துவிட்டதோடு நீங்கள் கட்டப் போகும் கோயிலுக்கு என் முதல் காணிக்கையாக இருக்கட்டும் என்றார். மனநிறைவோடு திரும்பிய குழுவினர் நம்பூதிரி குறித்த இடத்தைப் பார்வையிட்டனர். கேரளாவில் எங்கோ அமர்ந்து கொண்டு எத்தனை தீட்சண்யமாக இவ்விடத்தைப் பற்றி சொன்னார் என்பதை எண்ணி வியந்தனர்.

அந்த இடம் பஞ்சாயத்துக்குச் சொந்தமானது. குழுவினர் அனைவரும் சேர்ந்து பணம் செலுத்தி அந் நிலத்தை வாங்கி பதிவு செய்தனர். இடத்தை சுத்தம் செய்தனர். பின்பு ஒரு நல்ல நாளில் பூமி பூஜையுடன், கோயில் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது. கையில் பணம் இல்லை என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, இறையருளால் கட்டிடம் சிறிது சிறிதாக உயர ஆரம்பித்தது. யாரையும் கேட்காமலேயே அவ் வழியே செல்பவர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். அப்பகுதியில் உள்ள மணல் மற்றும் செங்கல் வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு கட்டுமானப் பொருட்களை கோயில் வளாகத்தில் இறக்கினர். பெயிண்ட் கம்பெனி விநியோகஸ்தர் ஒருவர் கோபுரத்திற்கு வர்ணம் பூசித்தர முன் வந்தார். தொழிலதிபர் ஒருவர் கும்பாபிஷேகத்தை தன் செலவில் சேமித்த பணம் மற்றும் இத்துடன் தாங்களாகவே தனிப்பட்ட முறையில் வசூல் செய்த தொகை, இவற்றைக் கொண்டு கோயில் தளம், சன்னிதி முன்பு உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாயினால் அமைந்த தடுப்பு போன்றவற்றை நிறுவிய பெருமை அக்குழந்தைகளே சாரும். குழந்தைகளால் தேர்வு செய்யப்பட்ட ஆபத் சகாய சுந்தர விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வெகு அற்புதமாக நடந்தேறியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற்றனர். 150 ஆண்டுகளுக்கு மேல் முதிர்ந்த ஆலமரம், அரசமரம், வேம்பு ஆகிய தெய்வீக விருட்சங்களின் நிழலில் அமைந்த இத்தலம் குளிர்ச்சி, தூய காற்று, அமைதியான சூழலுடன் ஓர் அடர்ந்த வனத்துக்குள் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.


தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer